பதிவர்கள் திகட்ட திகட்ட எழுதிய ஒரு படத்தை பற்றி எழுத வேண்டுமா என்று முதலில் தோன்றியது ஆனால் எழுதாமல் இருக்க முடியவில்லை….ஒரு வேளை அது தான் எந்திரனின் வெற்றியோ…
நான் ரஜினி வெறியன் அல்ல…ஒரு ரசிகன் மட்டுமே…திரைபடங்களுக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ அதை மட்டுமே கொடுக்க நினைக்கும் ஒரு திரை ரசிகன்… சிறு வயதிலே புற சூழல்களால் ரஜினியின் பக்கம் ஈர்க்கப்பட்ட பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்…
இன்று எந்த வார்த்தைகளுக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி எந்திரன் என்ற ஒரு வார்த்தைக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது…
எந்திரன் பார்க்க வேண்டும் போல் இருந்தது விமர்சகர்கள் சொல்வது போல் இந்த நினைப்பே ஊடகங்களால் ஊட்டப்பட்டது என்றாலும் எனக்கு அது எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு சராசரி திரை ரசிகனாக திரையகம் சென்றேன்…மகிழ்ந்தேன்…இந்த வயதிலும் இந்த மனிதன் இப்படி கடினப்பட்டு நடித்திருக்கிராரே என்று வியந்தேன்.
கிடைத்த களத்தை பயன்படுத்தி ஹாலிவுட்டை சேர்த்தவர்கள் எல்லா அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டிவிட்டனர்…திகட்ட திகட்ட அவர்கள் பிரமாண்டத்தை கொடுத்து விட்டார்கள்….எந்திரன் நம் உள்ளூர் நடிகனை வைத்து அதையே திரும்ப செய்து காட்டியுள்ளனர். ஆங்கில படங்களை அதிகம் பார்பவர்களுக்கு இது எந்த பிரமிப்பையும் உருவாக்காது என்றாலும் அந்த படங்களையே பார்க்காத நம்முடன் பிறந்தும் தமிழ் மொழியை தாண்டி படம் பார்க்காத ரசிகனை இது நிச்சயம் ஆச்சர்யத்தில் தள்ளும்…நாம் முதன் முதலில் ஆங்கில படங்களை பார்த்த போது அடைந்த ஒரு பிரம்மிப்பை இது அவர்களுக்கு நிச்சயம் தரும்.
இது போன்ற படங்கள் ரஜினியை தவிர யார் நடித்து இருந்தாலும் நிச்சயம் மாநகரங்களை தாண்டி இருக்காது. அந்த வகையில் இதை சரியாக கணித்த ஷங்கரை பாராட்டலாம்.
கடைசி நிமிடங்களுக்கு கொடுத்த முக்கியதுவத்தை தமிழ் ரசிகர்களை கருத்தில் கொண்டு பாடல்களுக்கும், நகைச்சுவைக்கும் கொடுத்திருந்தால் ஏதோ ஒன்று குறைவதை போல் இருக்கும் நினைப்பை மாற்றி இருக்காலம்.
வெற்றி தோல்வி சகஜம்…எந்திரன் அடைத்த வெற்றி… புகுத்தப்பட்டது அல்ல… எந்திரன் குழுவின் வியர்வை ஓவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. என்ன வெற்றியின் பங்கு முழுக்க சன் டிவிக்கு மட்டும் போவதை நினைத்தால் கொஞ்சம் நெருடுகிறது…எந்த கஷ்டமும் படாமல் முதலைகளை போல் அவர்கள் முழுங்கும் எந்திரன் லாபம்… ரஜினிக்கே கொஞ்சம் எரிச்சலாய் தான் இருக்கும். பணம் இருந்தால் சன் டிவி அல்ல…எந்த டிவியும் ரஜினியை நம்பி படம் எடுக்கும்.
ரஜினி ரசிகனாய் ரஜினி வெறியர்களுக்கு சொல்வது என்னவென்றால் “நீங்கள் உங்களை தாழ்த்திக் கொண்டு ரஜினியை உயர்த்துவதாய் நினைத்துக் கொள்கிறீர்கள்…ஆனால் உங்கள் செயல்கள் உங்களை மனிதர்களாய் கூட ஏற்றுக் கொள்ளாத அளவிற்கு இருக்கிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்”.


