அறுபட்ட சமாதானம்

May 6, 2013 by · 1 Comment
Filed under: கவிதை 

Sri-Lanka-war



அறுபட்ட சமாதானம்,
மாயமாய் ஒரு போரரங்கம்…
உலகமே ஒன்றிணைந்து,
அசிங்கமாய் ஒரு அவமானம்…

விடுதலை சவத்தின், மேல்
உலகம் தூவிய அனுதாபம்…
ஆண்டுகள் அழிந்தாலும்
அமிழாத நினைவுகளாய்….

அஹிம்சையும் வழியிலந்து
வீரமும் ஒளியிழந்து
இடைமறித்த துயரங்கள்
இனி,
விலாசம் தேட வைக்க
இனி ஒரு விதி செய்வோம்…
உலகமே வியக்கும் வண்ணம்…
தமிழ் இன உணர்வுடன்…
கொஞ்சம் ஒற்றுமையுடன்…

கரிசனையான ஒரு தமிழன் இல்லையா…

கேள்வி : இலங்கை செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இடம் பெறுவார்களா?

கருணாநிதி பதில் : இல்லை.

என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…இன்னும் எவ்வளவு நாட்கள் தமிழர்களை ஏமாற்ற போகிறார்கள்… முழு பலத்தையும் இழந்து அனாதரவாய் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய ஏன் தமிழ் நாட்டை ஆளும் கட்சிகளுக்கு சிறிது எண்ணம் கூட வரவில்லை…

பங்களாதேசை பிரிக்கும் பொழுது வங்காள மொழி பேசுபவர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் செய்த உதவிகள் சொல்லி மாளாது… தமிழ்…தமிழ் என்று பிழைப்பு நடத்தும் இந்த அரசுகள் வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை…இவர்கள் உதவுவதாக நடத்தும் நாடகங்கள் தான் நம்மில் கோபத்தை வர செய்கிறது.

அன்று புலிகளை சொல்லி அவர்களை ஒதுக்கினர்கள் இன்று அதே புலிகளை சொல்லி சிறுமை படுத்துகின்றனர்… என் தந்தையோ…தாயோ… எனக்கு இன உணர்வை ஊட்டவில்லை…நான் கற்ற தமிழ் எனக்கு இன உணர்வை ஊட்டியது… தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறோம்…ஆனால் ஒரு சிறு நாடு நம்மை சிறுமை படுத்துகிறது… நமது வீரத்தை பற்றி கேள்வி இல்லை… நமது விவேகம்…ஆழ்ந்து சிந்தித்தால்…நாம் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறோம்…நமக்கு நாம் அரசனை போல் தான் வாழுகிறோம்…ஆனால் ஒரு இனமாக இன்று நாம் தாழ்ந்து இருக்கிறோம்… இது பலருக்கு புரிவதில்லை…ஒரு இனத்திற்கு உள்ளேயே மாநிலத்தை பிரிப்பதில் ஆந்திர மாநிலமே பற்றி எரிந்தது…வேறொருவன் நம்மனவனை நமக்கு தெரிந்தே நசுக்கினான்…நமது விவேகம் என்ன ஆனது… நம்மிடம் இந்தியாவை சார்ந்த எந்த இனத்தவரும் இறையாண்மையை பற்றி பேச தகுதியே கிடையாது…இனத்தை பலிகொடுத்து உலகிலயே முதல் இனமாக நாம் அல்லவா இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்…

தமிழர்களே! இது தான் இன உணர்வோ…

போர்க்குற்றம்… நல்ல நகைச்சுவை…

நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எந்த நாடுகளுக்கும் போர்க்குற்றத்தை பற்றி பேசாவோ விசாரிப்பதற்கு கோரிக்கை வைக்கவோ எந்த தகுதியும் இல்லை போல் தெரிகிறது…

அமெரிக்காவின், ஆப்கானிஸ்தான் மீதான போரில் மறைக்கப்பட்ட பல மனிதவுரிமை குற்றங்கள் சமீபத்தில் ஒரு இணையதளத்தில்( http://wardiary.wikileaks.org ) கசிந்த ராணுவ கோப்புகளில் பக்கம் பக்கமாக புதைந்து உள்ளது. கிட்டதட்ட 92,000 கோப்புகள் அத்தனையும் மனித உயிர்களை எதையோ போல் நினைத்து அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய கொடுமைகள்…

இதில் என்ன கொடுமை என்றால் அவர்களுக்கே தெரியாது எத்தனை அப்பாவி மனித உயிர்கள் பறிக்கப்பட்டது என்கின்ற விடயம். ராணுவ கோப்புகள் 2004 இருந்து 2010 வரையான காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளை தவறுதலாக நடந்ததாக வகைப்படுத்தி உள்ளது. இதை விட மோசமான விடயம் இந்த ராணுவ ரகசியம் வெளியானதால் தங்கள் படைகளுக்கு என்ன வகையான தொல்லை ஏற்படும் என்பதே அவர்களுடைய இப்போதைய பெரிய கவலை…அமெரிக்க தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகளில் இருந்து தெரிய வரும் விடயமும் இது தான். ஒரு அமெரிக்கன் இறந்தால் ரத்த கண்ணீர் விடும் இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த எதிரி உலகின் எந்த மூளையில் இருந்தாலும் கொடூரக் கரங்களால் கொன்று குவிக்க தயங்குவதில்லை.

இவர்களின் ரத்த பசிக்கு முக்கிய காரணம் தங்கள் ஆயுதங்களை சோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களாக எதிரி நாடுகளின் மக்களை நினைப்பதே. இவர்களிடம் போய் ஈழத்தின் போர்குற்றம் பற்றி பேசினால் என்ன கிடைக்கும்…

உலக வல்லாதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. ஐரோபியர்கள் இத்தனை காலம் போட்டுவந்த ஆமாம் சாமியை இனி யோசித்து தான் செய்வார்கள். கூடவே இருக்கின்ற கூட்டமைப்பு நாடுகளையும் ஏமாற்றி வெற்றி என்பதை யோசித்து கூட பார்க்க முடியாத இந்த போரினால் என்ன பயன்…பல லட்சம் மனித உயிர்களை அழித்தது தான் மிச்சம்.

அமெரிக்க இராணுவத்தின் “பிடி அல்லது கொல்” என்கின்ற சித்தாந்தம் அவர்களால் தீவிரவாதி என்று சொல்லப்படுகிறவர்களுக்கு மட்டுமல்ல…அந்த நாடுகளில் வாழும் அப்பாவிகளுக்கும் சேர்த்தே…